உணவுத் தட்டிலே ஒளிந்திருக்கும் ஆபத்து “தி இந்தியா ஸ்டோரி” டீசர் பரபரப்பு!

சமூகத்தில் நாளுக்கு நாள் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தி வரும் பூச்சிக்கொல்லி விவசாயத்தின் மறுபக்கத்தை வெளிச்சமிடும் சமூக அக்கறை கொண்ட திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி: ஸ்லோ பாய்சன் இன் புரோகிரஸ்’ படத்தின் டீசர் வெளியாகி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

நடிகை காஜல் அகர்வால் மற்றும் நடிகர் ஷ்ரேயாஸ் தல்படே முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த திரைப்படம், நாம் அன்றாடம் உண்ணும் உணவின் மூலம் உடலுக்குள் புகும் நச்சுப் பொருட்கள் மற்றும் அதன் நீண்டகால விளைவுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.

Zee Studios மற்றும் MIG Production & Studios இணைந்து வழங்கும் இப்படத்தை சேட்டன் DK இயக்கியுள்ளார். சாகர் பி. ஷிண்டே கதையை எழுதி தயாரித்துள்ளார். தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இப்படம், ஜூலை 24, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

வெளியாகியுள்ள டீசர், பூச்சிக்கொல்லி விவசாயத்தின் பின்னணியில் மறைந்திருக்கும் ஆபத்தான உண்மைகளை அம்பலப்படுத்த போராடும் கதாபாத்திரங்களாக காஜல் அகர்வாலும் ஷ்ரேயாஸ் தல்படேவும் தோன்றுகின்றனர். குறிப்பாக, அன்றாட உணவுப் பொருட்களில் கலந்து வரும் நச்சுப் பொருட்கள் குழந்தைகள் மற்றும் இளம் தலைமுறையினரின் உடல்நலத்திற்கு ஏற்படுத்தும் பாதிப்புகளை உணர்வுப்பூர்வமாக சித்தரிக்கிறது.

இப்படத்தை பற்றி சேட்டன் DK கூறுகையில்..,

“தி இந்தியா ஸ்டோரி என்பது வெறும் திரைப்படம் அல்ல; சமூகமாக நாம் அவசியம் பேச வேண்டிய ஒரு முக்கிய உரையாடல். பூச்சிக்கொல்லி விவசாயத்தின் அதிர்ச்சியூட்டும் உண்மைகளையும், அது உருவாக்கும் அமைதியான உடல்நல நெருக்கடியையும் இந்தக் கதையின் மூலம் வெளிப்படுத்த விரும்பினோம். டீசர் என்பது இந்தப் பிரச்சினையின் ஒரு சிறிய முன்னோட்டம் மட்டுமே. தினமும் கோடிக்கணக்கான குடும்பங்களை பாதிக்கும் இந்த விஷயத்தைப் பற்றி மக்கள் சிந்திக்கவும், விழிப்புணர்வு பெறவும், தங்கள் உணவுத் தட்டில் என்ன வருகிறது என்பதை கேள்வி எழுப்பவும் இந்தப் படம் தூண்ட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்,” என்றார்.

நடிகர் ஷ்ரேயாஸ் தல்படே கூறியதாவது..,

“இந்தப் படத்தில் என்னை மிகவும் ஈர்த்தது அதன் கருப்பொருள்தான். பூச்சிக்கொல்லி விவசாயம் ஒவ்வொரு குடும்பத்தையும் பாதிக்கும் பிரச்சினையாக இருந்தாலும், அதன் நீண்டகால விளைவுகளை நாம் பெரும்பாலும் சிந்திப்பதில்லை. மிகப்பெரிய அமைப்புக்கு எதிராக போராடும் ஒரு சாதாரண தந்தையின் உணர்வுபூர்வமான பயணத்தை என் கதாபாத்திரம் மூலம் ரசிகர்கள் உணர்வார்கள் என்று நம்புகிறேன். இது பொழுதுபோக்கு மட்டுமல்ல, மிக முக்கியமான ஒரு விவாதத்தையும் தொடங்கும் திரைப்படம்.”

நடிகை காஜல் அகர்வால் கூறுகையில்,

“தி இந்தியா ஸ்டோரி ஒரு வலுவான சமூகச் செய்தியை மையமாகக் கொண்ட திரைப்படம். ஒரு தாயாக இந்தக் கதை என்னை மிகவும் ஆழமாகத் தொட்டது. இன்றைய பெற்றோர்களின் அச்சங்களையும் கவலைகளையும் இது பிரதிபலிக்கிறது. பொதுமக்களின் பார்வைக்கு பெரும்பாலும் வராத ஒரு உண்மையை டீசர் வெளிப்படுத்துகிறது. நாம் சாப்பிடும் உணவு மற்றும் அது எதிர்கால தலைமுறையினருக்கு ஏற்படுத்தும் தாக்கம் குறித்து மக்கள் அதிக விழிப்புணர்வுடன் இருக்க இந்தப் படம் உதவும் என்று நம்புகிறேன்,” என்றார்.

இப்படத்தின் இணை தயாரிப்பாளர்களாக ஸ்வாதி விநாயக் சைந்தானி, அனிதா ஜாதவ், விநாயக் சைந்தானி, கல்பேஷ் ஷா, தேவ்யானி கொராடே மற்றும் பிரேம் ஜோஷி ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

தொழில்நுட்பக் குழுவில் நிஷாந்த் பகவத் (ஒளிப்பதிவு), மங்கேஷ் தாக்டே (இசை), ஆஷிஷ் மாத்ரே (படத்தொகுப்பு), ஷகீல் அஜாமி (பாடல்கள்), அன்மோல் பாவே (ஒலி வடிவமைப்பு) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சமூகத்தில் அமைதியாக பரவி வரும் “மெதுவான விஷம்” குறித்த எச்சரிக்கை மணி அடிக்கும் படைப்பாக உருவாகியுள்ள ‘தி இந்தியா ஸ்டோரி: ஸ்லோ பாய்சன் இன் புரோகிரஸ்’, சமூக அக்கறை கொண்ட திரைப்படமாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.