பிரைம் வீடியோவில் கவனம் பெற்ற 5 முக்கிய குற்றத் தொடர்கள்

EXAM தற்போது Prime Video தளத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், கடந்த சில ஆண்டுகளாக அந்த தளத்தில் உருவாகி வரும் பல அடுக்குகள் கொண்ட குற்றத் தொடர்கள் குறித்து மீண்டும் கவனம் திரும்பியுள்ளது. குறிப்பாக, பெண் போலீஸ் அதிகாரிகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதைகள், வழக்கமான ‘மாஸ்’ சித்திரிப்புகளை தாண்டி மிகவும் நிஜமான அணுகுமுறையை முன்வைத்து வருகின்றன.

இந்த தொடர்களில் வரும் பெண் போலீஸ் கதாபாத்திரங்கள் வெறும் சீருடையில் அதிகாரம் காட்டும் நபர்களாக மட்டும் இல்லை. அவர்கள் உணர்ச்சிகளால் சிக்குண்ட மனிதர்கள்; குடும்ப அழுத்தங்கள், தனிப்பட்ட காயங்கள், மன அழுத்தங்கள் மற்றும் முறைகேடான அமைப்புகளுக்கு எதிரான போராட்டங்களுடன் வாழ்பவர்கள். தவறுகள் செய்யும், உடைந்து போகும், மீண்டும் எழும் மனிதர்களாக அவர்கள் சித்தரிக்கப்படுவது தான் இந்த புதிய அலை குற்றத் தொடர்களின் மிகப்பெரிய பலமாக மாறியுள்ளது.

அந்த வகையில், பெண்களை மையமாகக் கொண்டு உருவான மற்றும் பார்வையாளர்களிடையே கவனம் பெற்ற சில முக்கிய குற்றத் தொடர்கள் தற்போது அதிகமாக பேசப்பட்டு வரும் ஐந்து முக்கியமான படைப்புகளை பார்க்கலாம்.

சுழல் : தி வோர்டெக்ஸ் – ஷ்ரேயா ரெட்டி நடித்த இன்ஸ்பெக்டர் ரெஜினா தாமஸ், சமீபத்திய OTT உலகில் மிகவும் நினைவில் நிற்கும் பெண் போலீஸ் கதாபாத்திரங்களில் ஒன்றாக திகழ்கிறது. சம்பலூரில் நடைபெறும் மயான கொள்ளை திருவிழாவை பின்னணியாகக் கொண்ட இந்த தொடரில், ஒரு இளம் பெண் காணாமல் போன வழக்கை விசாரிக்கும் ரெஜினா, அதே நேரத்தில் தனது மகனையும் இழக்கிறார். இதனால் அவரது தொழில்முறை வாழ்க்கையும், தனிப்பட்ட வாழ்க்கையும் ஒன்றாக கலக்கின்றன. அதுவே இந்த கதாபாத்திரத்தின் பலம். ரெஜினா ஒரு கண்டிப்பான அதிகாரியாக அல்லாமல், மன உளைச்சல், கோபம், தாய்மையின் பயம் ஆகியவற்றோடு வாழும் மனிதராக எழுதப்பட்டிருக்கிறார்.

சாணிக் காயிதம் – இந்த குற்ற அதிரடி படத்தில் கீர்த்தி சுரேஷின் பொன்னி, பாரம்பரிய பெண் போலீஸ் சித்திரிப்பிலிருந்து மிகவும் விலகிய கதாபாத்திரம். குடும்பத்தை காப்பாற்ற முயலும் ஒரு காவலராக ஆரம்பிக்கும் அவள், வாழ்க்கையை சிதைக்கும் அளவிலான கொடூரமான அனுபவத்தை சந்திக்கிறார். அதன் பிறகு நடப்பது வழக்கமான நீதிக்கான போராட்டமல்ல; பழிவாங்கலுக்கான கொதிக்கும் பயணம். இந்த பட்டியலில் மிகவும் வன்முறையான கதாபாத்திரமாக இருந்தாலும், போலீஸ் சீருடையின் பின்னாலுள்ள உடைந்த மனிதரை மிகவும் நேர்மையாக காட்டியவராகவும் பொன்னி திகழ்கிறார்.

தஹாட் – சோனாக்ஷி சின்ஹாவின் SI அஞ்சலி பாட்டி, இந்தி OTT உலகில் பெண் போலீஸ் கதாபாத்திரங்களுக்கு புதிய தொனியை கொண்டு வந்தார். அவர் மென்மையான நாயகி அல்ல. நேராக பேசுபவர், தன்னம்பிக்கையுடன் செயல்படுபவர், குற்றவாளிகளோடு மட்டுமல்ல தனது துறையினரிடமிருந்தும் எதிர்ப்புகளை சந்திப்பவர். தொடர்ச்சியான மர்ம மரணங்களை மையமாகக் கொண்ட இந்த தொடரில், அஞ்சலி பாட்டி ஒரு ஆபத்தான விசாரணையின் மையத்தில் நிற்கிறார். ஆனால் அந்த வழக்கு மட்டுமல்ல அவரது கதை; தொடர்ந்து தனது அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கும் உலகில் தன்னுடைய இடத்தை உறுதியாக பிடித்துக் கொண்டிருப்பதே இந்த கதாபாத்திரத்தை தனித்துவமாக்குகிறது.

டல்டல் – பூமி பட்னேக்கரின் ரிட்டா பெரேரா, வழக்கமான போலீஸ் அதிகாரி அல்ல. கூர்மையான உள்ளுணர்வும் திறமையும் கொண்டிருந்தாலும், தன்னைச் சுற்றியிருக்கும் இருண்ட உலகின் மன அழுத்தங்களை சுமந்து வாழும் நபர். இந்த உளவியல் குற்றத் திரில்லரில், ரிட்டா ஒரு தொடர் கொலைகாரனை தேடுவதோடு, தனது கடந்தகாலத்தின் சுமைகளையும் எதிர்கொள்கிறார். இளம் வயதிலேயே மும்பை குற்றப்பிரிவை வழிநடத்தும் அவர், கடுமையான அதிகாரியாகவும் உடைந்த மனிதராகவும் இரு நிலைகளில் தொடர்ந்து இயங்குகிறார். அந்த இரட்டைத் தன்மையையே இந்த தொடர் மிகவும் நுட்பமாக பயன்படுத்துகிறது.

எக்ஸாம் – இயக்குநர் A. சற்குணத்தின் முதல் வெப் தொடரான எக்ஸாம், இந்த விவாதத்திற்கு புதிய பரபரப்பை சேர்த்துள்ளது. குறிப்பாக துஷாரா விஜயனின் ஜான்சி மற்றும் அதிதி பாலனின் DSP மரமல்லி ஆகிய இரு கதாபாத்திரங்கள் அதன் மையமாக உள்ளன. தைக்கரா என்ற மலைநகரத்தை பின்னணியாகக் கொண்ட இந்த தொடர், போட்டித் தேர்வுகளைச் சுற்றியுள்ள பெரிய மோசடியை வெளிச்சத்திற்குக் கொண்டு வர போராடும் DSP மரமல்லியாக நடிக்கும் ஜான்சியை பின்தொடர்கிறது. ஆனால் அந்த சதி அவள் நினைத்ததைவிட மிகப்பெரியது என்பதை பின்னர் உணர்கிறாள். தற்போது பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ள எக்ஸாம், ஜான்சி மற்றும் மரமல்லி இடையேயான மனப்போரின் மூலம் OTT உலகில் பெண் போலீஸ் கதாபாத்திரங்களின் புதிய பரிணாமத்தை சுவாரஸ்யமாக பதிவு செய்கிறது.

இந்த அனைத்து கதைகளையும் ஒரே கோட்டில் இணைப்பது, பெண்கள் போலீஸ் அதிகாரிகள் சீருடை அணிந்திருப்பது மட்டும் அல்ல; அவர்கள் எழுதப்படும் விதத்தில் ஏற்பட்டுள்ள ஆழமான மாற்றம்தான். இந்த கதாபாத்திரங்கள் பிழையற்ற ‘சூப்பர் ஹீரோக்கள்’ அல்ல. அவர்கள் தவறுகள் செய்கிறார்கள், உணர்ச்சி ரீதியான சுமைகளால் பாதிக்கப்படுகிறார்கள், முறைகேடுகள் நிறைந்த அமைப்புகளுக்குள் வாழ்கிறார்கள். பல நேரங்களில் அந்த அமைப்புகளே அவர்களின் எண்ணங்களையும் செயல்களையும் வடிவமைக்கின்றன. அதனால் தான், பழைய ஒரே மாதிரியான ‘ஹீரோயிக்’ சித்திரிப்புகளை விட இவர்கள் மிகவும் நிஜமானவர்களாகவும், மனிதர்களாகவும் பார்வையாளர்களிடம் இணைகிறார்கள். OTT உலகில் உருவாகி வரும் இந்த மாற்றம், எதிர்காலத்தில் பெண் போலீஸ் கதாபாத்திரங்களை இன்னும் எத்தனை புதிய பரிமாணங்களில் பார்க்கப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.