தமிழ் ஹிப்ஹாப் இசையில் தனித்துவமான பாணியால் கவனம் ஈர்த்து வரும் கில்லா கே மற்றும் பால் டப்பா, நீண்டகால நட்பைத் தொடர்ந்து மீண்டும் ஒன்றிணைந்து ‘அடடா’ என்ற புதிய பாடலை உருவாக்கியுள்ளனர். டெஃப் ஜாம் ரெக்கார்டிங்ஸ் இந்தியா சார்பில் வெளியாகியுள்ள இப்பாடல், தமிழ் கலாச்சாரம், மொழி, நகைச்சுவை மற்றும் சினிமா நினைவுகளை நவீன ஹிப்ஹாப் இசையுடன் இணைத்து ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்குகிறது.
துள்ளலான இசை, மனதில் பதியும் ஹூக்ஸ் மற்றும் நகைச்சுவை கலந்த கூர்மையான வரிகளுடன் உருவாகியுள்ள ‘அடடா’, தமிழர்களின் அடையாளம் மற்றும் வாழ்வியலை சமகால ராப் இசையின் வழியாக கொண்டாடுகிறது. குறிப்பாக தமிழ் சினிமாவின் பழைய நினைவுகளையும், வளர்ந்து வரும் பிராந்திய ராப் கலாச்சாரத்தையும் இணைத்து பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.
புகழ்பெற்ற தமிழ் திரைப்படமான ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தின் காட்சியமைப்பிலிருந்து உத்வேகம் பெற்றுள்ள ‘அடடா’, அந்தக் காலகட்டத்தின் பிரபலமான கலைச் சூழலை இன்றைய தலைமுறைக்கு ஏற்ற ஹிப்ஹாப் வடிவில் புதுப்பித்துள்ளது. இசை வீடியோவில் பாரம்பரிய கச்சேரி அரங்கம், நவீன ராப் மேடையாக மாற்றப்பட்டு, பாரம்பரிய காட்சிகளுடன் சமகால இசை பாணியும் இணைக்கப்பட்டுள்ளது.
குறும்புத்தனமான கதை சொல்லல், நகைச்சுவை கலந்த பஞ்ச் வரிகள் மற்றும் கில்லா கே – பால் டப்பா இருவருக்கும் இடையேயான இயல்பான கெமிஸ்ட்ரி ஆகியவை இசை வீடியோவின் முக்கிய சிறப்பம்சங்களாக அமைந்துள்ளன. இதன் மூலம் தமிழ் பாரம்பரியத்தை புதிய தலைமுறையிடம் எளிமையாகவும் துடிப்பாகவும் கொண்டு செல்லும் முயற்சியாக இப்பாடல் அமைந்துள்ளது.
அன்றாட தமிழ் வாழ்க்கை, மொழி மற்றும் உள்ளூர் கலாச்சார அனுபவங்களை தனது இசையில் பிரதிபலித்து வரும் பால் டப்பாவும், கூர்மையான கதை சொல்லல் மற்றும் நகைச்சுவை மூலம் தமிழ் சமூகத்தின் வாழ்வியலை பதிவு செய்து வரும் கில்லா கேவும் இணைந்திருப்பது ‘அடடா’ பாடலுக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.
இருவரின் நீண்டகால நட்பும், ஒரே மாதிரியான படைப்புச் சிந்தனைகளும் இந்தக் கூட்டணியை வெறும் இசை இணைப்பாக இல்லாமல், தமிழ் கலாச்சாரத்திற்கான ஒரு கொண்டாட்டமாக மாற்றியுள்ளன. பாரம்பரியத்தையும் நவீன ராப் இசையையும் இணைத்து, தமிழ் அடையாளத்தை பெருமையுடன் வெளிப்படுத்துகிறது ‘அடடா’.
பாடல் குறித்து கில்லா கே பகிர்ந்து கொண்டதாவது,
“தமிழ் கலாச்சாரத்தை துடிப்பானதாகவும் உயிரோட்டம் மிக்கதாகவும் மாற்றும் அனைத்தையும் கொண்டாடும் விதமாக ‘அடடா’ பாடலை உருவாக்கியுள்ளோம். ‘தில்லானா மோகனாம்பாள்’ போன்ற ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க திரைப்படத்தை ஹிப்ஹாப் வழியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதே எங்களது நோக்கம். அதே நேரத்தில் அதன் ஆன்மாவையும் உணர்வையும் மாற்றாமல் அப்படியே வைத்திருக்க விரும்பினோம். ஒவ்வொரு வரியும், காட்சியும், நடிப்பும் மக்கள் ரசிக்க வேண்டும், தங்களது வேர்களைப் பற்றி பெருமிதம் கொள்ள வேண்டும், மேலும் நமது கலாச்சாரத்தை புதிய விதத்தில் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே உருவாக்கப்பட்டது” என்றார்.
பால் டப்பா பகிர்ந்து கொண்டதாவது,
“இந்தப் பாடலுக்கான யோசனையை முதன்முதலில் கேட்டபோதே, இது சிறப்பான விஷயம் என்பதை உணர்ந்தேன். தமிழ் கலாச்சாரத்தின் நகைச்சுவை, மொழி மற்றும் சினிமா பாரம்பரியத்தை நவீன ராப் இசையுடன் ‘அடடா’ பிரதிபலிக்கிறது. கில்லா கே உடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சி. உண்மையான, பொழுதுபோக்கு நிறைந்த, தமிழ் கலாச்சாரத்தை பெருமையுடன் பிரதிபலிக்கும் ஒரு படைப்பை உருவாக்க வேண்டும் என்பதில் எங்களது இருவரின் பார்வையும் ஒன்றாக இருந்தது. அதே நேரத்தில், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் தங்களுடன் தொடர்புபடுத்தி கொள்ள வேண்டும் என்பதும் எங்களது நோக்கமாக இருந்தது” என்றார்.
டெஃப் ஜாம் ரெக்கார்டிங்ஸ் இந்தியா மூலம் வெளியாகியுள்ள ‘அடடா’, தமிழ் ஹிப்ஹாப் இசை தனது தனித்துவமான பாதையில் தொடர்ந்து வளர்ந்து வருவதற்கான மற்றொரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. உள்ளூர் கலாச்சாரத்தையும் பிராந்திய அடையாளத்தையும் மையமாகக் கொண்ட ஒரு படைப்பு, உலகளாவிய ரசிகர்களுடனும் தொடர்பை ஏற்படுத்த முடியும் என்பதை இந்தப் பாடல் வெளிப்படுத்துகிறது.





