AK Film Factory சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரிப்பில், ஜி.வி.பிரகாஷ் மற்றும் கயாது லோஹர் நடிப்பில் உருவாகியுள்ள ஃபேண்டஸி திரில்லர் திரைப்படம் ‘இம்மார்டல்’. அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கிய இப்படம் கடந்த செப்டம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிப்படமாகியுள்ளது.
படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக சென்னையில் படக்குழுவினர், திரையுலக பிரபலங்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்ட வெற்றி விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினரின் உழைப்பு, ரசிகர்களின் வரவேற்பு மற்றும் திரையரங்குகளில் கிடைத்த வெற்றி குறித்து பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் பகிரப்பட்டன.
விழாவின் முக்கிய நிகழ்வாக, தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன் நடிகர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் விநியோகஸ்தர் சக்திவேலன் ஆகியோருக்கு உயர்தர கைக்கடிகாரங்களை பரிசாக வழங்கினார். அதோடு, ஜி.வி.பிரகாஷுக்கு RX100 பைக் ஒன்றையும் பரிசளித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ரசிகர்கள், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் ஊடக நண்பர்களுக்கு விழாவில் படக்குழுவினர் நன்றி தெரிவித்தனர்.
தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன் பேசியதாவது..,
“இம்மார்டல்” திரைப்படம் வித்தியாசமான ஜானரில் உருவாக்கப்பட்டுள்ள படம். சிஜி உள்ளிட்ட தொழில்நுட்ப அம்சங்களை சிறப்பாக உருவாக்க வேண்டும் என்பதில் படக்குழு ஆரம்பம் முதலே கவனமாக இருந்தது. அந்த முயற்சிக்கு ரசிகர்கள் மற்றும் பத்திரிகை நண்பர்கள் அளித்த ஆதரவும், படத்தைப் பற்றிய சரியான விமர்சனங்களும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.
இந்தப் படத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய நடிகர் ஜிவி பிரகாஷுக்கு எனது நன்றி. படத்தின் படப்பிடிப்பு தொடங்கி, வெளியீடு மற்றும் புரமோஷன் பணிகள் வரை ஜிவி பிரகாஷ் அளித்த ஆதரவு மிகச் சிறப்பாக இருந்தது, தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்று படத்தை புரமோட் செய்தோம்.
மேலும், படத்தை தமிழகத்தில் வெளியிட்ட சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் அவர்களுக்கு நன்றி. “படத்தை பெரிதாக வெளியிட வேண்டும்” என்ற தனது கோரிக்கையை ஏற்று ஆரம்பத்தில் 250-க்கும் மேற்பட்ட திரைகளில் படத்தை வெளியிட்டதுடன், படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து பல திரையரங்குகளில் கூடுதல் காட்சிகள் மற்றும் பெரிய திரைகள் ஒதுக்கப்பட்டது.
குறிப்பாக சனி, ஞாயிறு நாட்களில் படத்திற்கு கிடைத்த வரவேற்பு காரணமாக பல திரையரங்குகளில் திரையிடல் அதிகரிக்கப்பட்டது பெரிய மகிழ்ச்சி.
“இம்மார்டல்” படத்தை வெற்றிப் படமாக கொண்டு வந்த தனது ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றிக்கு அனைவரின் ஒத்துழைப்பும் முக்கிய காரணம் அனைவருக்கும் நன்றி.
ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணன் பேசியதாவது..,
ஜீவி பிரகாஷ் அவர்களுக்கு முதல் நன்றி. மேலும், படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த சக்தி சார், சாம் சி.எஸ். உள்ளிட்ட படக்குழுவினர் மற்றும் இந்த வெற்றியை மக்களிடம் கொண்டு சென்ற அனைத்து ஊடக நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. “இந்த வெற்றியில் மீடியா நண்பர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி”.
எடிட்டர் ராஜேஷ் பேசியதாவது..,
“இம்மார்டல்” படத்தின் வெற்றிக்கு ஆதரவளித்த அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். படம் வெளியான பிறகு பல இயக்குநர்கள் என்னைத் தொடர்புகொண்டு வாழ்த்தினார்கள், அவர்களின் பாராட்டுகள் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.
படத்தின் எடிட்டர் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இசையமைப்பாளர் சாம் சி.எஸ்., தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன், படக்குழுவினர் மற்றும் குறிப்பாக இயக்குநர் மாரியப்பன் சின்னா ஆகியோருக்கு எனது சிறப்பு நன்றி. இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஒவ்வொருவருக்கும் எனது நன்றி.
சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் சக்திவேலன் பேசியதாவது..,
“விநியோகம் என்பது வியாபாரம் சம்பந்தப்பட்டது என்றாலும், ஒரு படம் வெற்றி பெறும்போது கிடைக்கும் சந்தோஷமும் உற்சாகமும் எனக்கு மிகப்பெரிய எனர்ஜி. அந்த வகையில் ‘இம்மார்டல்’ படத்தின் தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரனுக்கு மனமார்ந்த நன்றி.
படக்குழுவினர் மிகப்பெரிய மெனக்கெடலுடன், குறிப்பாக CG பணிகளில் அதிக உழைப்புடன் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். பத்திரிகை நண்பர்கள் முதலில் படத்தைப் பார்த்து கொடுத்த ஆதரவும் பாராட்டும் எங்களுக்கு நம்பிக்கையை அளித்தது. அதன் பின்னர் ரசிகர்களும் படத்தை மிகப்பெரிய அளவில் கொண்டாடினர்.
சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஓசூர், ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை முதலே நல்ல வரவேற்பு கிடைத்து, ஷோ பை ஷோ வசூல் அதிகரித்தது.
தமிழ்நாடு முழுவதும் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை உணர்ந்ததும் ஜிவி பிரகாஷ் சாருக்கு தொலைபேசியில் தெரிவித்து மகிழ்ந்தேன். அவருடன் இதுவரை ஏழு படங்கள் செய்திருக்கிறேன்; அந்த ஏழு படங்களுமே எனக்கு வெற்றிப் படங்கள்தான். அவரது கேரியரில் அதிக வசூல் செய்த ஐந்து படங்களில் நான்கு படங்கள் என்னுடைய வெளியீடுகள் என்பதும் பெருமை.
இந்தப் படத்தில் ஜிவி பிரகாஷின் உழைப்பும், சாம் சி.எஸ். அவர்களின் பின்னணி இசைக்கான கூடுதல் கவனமும் பாராட்டுக்குரியது. விஷுவல்ஸ், CG உள்ளிட்ட ஒட்டுமொத்த தொழில்நுட்பக் குழுவினருக்கும் நன்றி.
முதன்முறையாக எனக்கு இந்தப் படத்தின் மூலம் அன்பளிப்பை வழங்கிய தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன், ஒரு வெற்றிப் படத்தை கொடுத்து தான் ஒரு தயாரிப்பாளர் மெட்டீரியல் என்பதை தமிழ் திரையுலகிற்கு நிரூபித்துவிட்டார். அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகளும் நன்றியும்” என்றார்.
நடிகர் கார்த்தி பேசியதாவது..,
“‘இம்மார்டல்’ படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பும் விமர்சனங்களும் வழங்கிய பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. நான் நடித்த ஒரு படத்திற்கு இந்த அளவுக்கு அதிகமான விமர்சனங்கள் கிடைத்ததில்லை.
ஐடி துறையை விட்டுவிட்டு சினிமாவுக்கு வந்த எனக்கு, சில நேரங்களில் இந்தத் துறையில் நாம் இருக்க வேண்டுமா என்ற சந்தேகம் வரும். ஆனால் இந்தப் படத்திற்கு கிடைத்த விமர்சனங்கள், ‘நமக்கும் இந்தத் துறையில் ஒரு இடம் இருக்கிறது’ என்ற நம்பிக்கையை கொடுத்திருக்கிறது.
‘இம்மார்டல்’ படக்குழுவினர் அனைவரும் இணைந்து மீண்டும் ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. அதுவும் முற்றிலும் வித்தியாசமான ஜானரில், இந்தப் படத்தில் செய்த சில தவறுகளை சரிசெய்து, இன்னும் சிறப்பான படத்தை உருவாக்க வேண்டும்.
என்மீது நம்பிக்கை வைத்து இப்படியொரு வித்தியாசமான கதாபாத்திரத்தை வழங்கிய இயக்குநர் மாரியப்பன் சின்னாவுக்கு சிறப்பு நன்றி. ஜிவி பிரகாஷ், சாம் சி.எஸ்., தயாரிப்பாளர் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினரின் உழைப்பும் இந்த வெற்றியில் இருக்கிறது. அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி” என்றார்.
நடிகர் குமார் நடராஜன் பேசியதாவது:
“‘இம்மார்டல்’ படத்தின் வெற்றிக்கு இயக்குநர் மாரியப்பன் சின்னாவின் உழைப்பே முக்கிய காரணம். கதை சொல்லும்போதே படம் எப்படி வர வேண்டும் என்பதில் தெளிவாக இருந்த அவர், தான் நினைத்தபடியே அதை திரையில் கொண்டு வந்திருக்கிறார். அவருக்கு எனது பாராட்டுகள்.
முதன்முறையாக இப்படியொரு பெரிய படத்தை தயாரித்த தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன், வித்தியாசமான கதையை முழுமையாக நம்பி படத்தை உருவாக்கியிருக்கிறார். அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். படத்தை சிறப்பாக வெளியிட்ட சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் சாருக்கும் நன்றி.
படத்தின் பிரம்மாண்டத்தை உயர்த்திய CG பணிகள் சிறப்பாக இருந்தன. அதற்காக தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படக்குழுவினருக்கு பாராட்டுகள். சாம் சி.எஸ். அவர்களின் இசையும் பின்னணி இசையும் படத்தின் தாக்கத்தை அதிகப்படுத்தியிருக்கிறது.
ஜிவி பிரகாஷ் எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் முழுமையாக தன்னை அர்ப்பணித்து நடிக்கக்கூடியவர். இந்தப் படத்திலும் சிறப்பாக நடித்திருக்கிறார். அவருடன் பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது. கயாது லோஹரும் தமிழை அழகாகப் பேசி சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்.
படத்திற்கு ஆதரவு அளித்த பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. இந்த வெற்றிப் பயணம் அடுத்த படங்களிலும் தொடர வேண்டும்” என்றார்.
நடிகை மிருதுளா பேசியதாவது..,
“இம்மார்டல்” படத்தில் நான் மிகவும் சிறிய கதாபாத்திரத்தில்தான் நடித்திருக்கிறேன். ஆனால் இந்தப் படத்தில் பணியாற்றிய அனுபவத்தை மிகவும் மகிழ்ச்சியாக ரசித்தேன். குறிப்பாக, சில சண்டைக் காட்சிகளில் நடித்திருக்கிறேன்.
இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய இயக்குநர் மாரியப்பன் சின்னாவுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். “இம்மார்டல்” படத்தின் வெற்றிக்கு முழு படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துகள்.
இசையமைப்பாளர் சாம் சி.எஸ். பேசியதாவது..,
“‘இம்மார்டல்’ திரைப்படம் நிச்சயம் வெற்றிப்படமாகும் என்ற நம்பிக்கை ஆரம்பம் முதலே எனக்கு இருந்தது. அது ஓவர் கான்ஃபிடென்ஸ் இல்லை. படத்தைப் பார்த்தபோதே ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ற வகையில் இப்படம் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில்தான் தொடர்ந்து பேசி வந்தேன். அந்த நம்பிக்கை தற்போது வெற்றியாக மாறியிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
ஒரு படம் வெற்றி பெறுவதற்கு கதை அல்லது பிரம்மாண்டமான மேக்கிங் மட்டும் போதாது. அதில் பணியாற்றும் அனைவரின் உண்மையான உழைப்பும், நேர்மறையான எனர்ஜியும் முக்கியம்.
இந்தப் படத்திற்காக அதிக நேரத்தையும் பொறுமையையும் செலவிட்டு பணியாற்றிய தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரனுக்கு நன்றி. இப்படத்தை வெற்றிப்படமாக்கிய பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி.
இயக்குநர் மாரியப்பன் சின்னா பேசியதாவது..,
எனது முதல் படமான “இம்மார்டல்” திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் மிகப்பெரிய ஆதரவு வழங்கிய பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றி. ஒரு அறிமுக இயக்குநராக எனக்கு கிடைத்த இந்த ஆதரவு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன், ஜிவி பிரகாஷ், சாம் சி.எஸ்., ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணன், ஸ்டண்ட் குழுவினர், VFX மேற்பார்வையாளர் மஹி, கோபி பிரசன்னா, மிக்ஸிங் பணிகளை மேற்கொண்ட ஷிவா உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இப்படத்தை உருவாக்கும் பயணத்தில் பலரும் எனக்கு உதவினார்கள், “இம்மார்டல்” படத்திற்காக உழைத்த ஒட்டுமொத்த குழுவினருக்கும் எனது நன்றி.
நடிகர் ஜிவி பிரகாஷ் பேசியதாவது..,
“இம்மார்டல்” படத்திற்கு இவ்வளவு பெரிய வரவேற்பையும், நேர்மறையான விமர்சனங்களையும் வழங்கிய பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் முதலில் நன்றி.
படம் வெளியான முதல் நாளிலிருந்தே கிடைத்த வரவேற்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது. “இம்மார்டல்” டிரெண்டிங்கில் வருவதைப் பார்த்தபோது தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரனின் மகிழ்ச்சியை நேரில் பார்க்க முடிந்தது.
வெள்ளிக்கிழமை சிறிய திரைகளில் தொடங்கி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெரிய திரைகள், கூடுதல் காட்சிகள் என படத்தின் ஷோகேசிங்கை மிகச்சிறப்பாக செய்த சக்தி சாருக்கு நன்றி.
இந்தப் படத்தை என்னிடம் முதலில் கொண்டு வந்த எடிட்டர் ஷான் லோகேஷுக்கு நன்றி. முதல் முறையாக ஒரு படத்தை தயாரிக்கும் அருண்குமார் சார், CG பணிகளுக்காக நீண்ட காலம் காத்திருந்து, படத்தின் தரத்தில் எந்த சமரசமும் செய்யாமல் பொறுமையாக இருந்தார். அவருடைய அந்தப் பொறுமைக்கும், நம்பிக்கைக்கும் இந்த வெற்றி கிடைத்திருக்கிறது.
அதேபோல், படத்தின் புரமோஷன் மற்றும் போஸ்டர் டிசைனில் சிறப்பாக பணியாற்றிய கோபி பிரசன்னா சார் மற்றும் அவரது குழுவினருக்கும் மிகப்பெரிய நன்றி.
வித்தியாசமான கதைக்களம் மற்றும் ஃபேண்டசி திரில்லர் அம்சங்களுடன் ரசிகர்களைக் கவர்ந்துள்ள“இம்மார்டல்” திரைப்படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.






