லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பாக, தயாரிப்பாளர் சுபாஸ்கரன் வழங்கும் ‘சிக்மா’ திரைப்படம் உலகம் முழுவதும் வரும் ஜூலை 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தின் மூலம் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார்.
படம் அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே ரசிகர்கள், திரையுலகினர் மற்றும் வர்த்தக வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘சிக்மா’, தற்போது தமிழ் சினிமாவின் முக்கியமான பேசுபொருளாக மாறியுள்ளது. சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் 20 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்று, ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
படத்தின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததையடுத்து, லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவன தலைவர் ஜி.கே.எம். தமிழ்குமரன் பகிர்ந்து கொண்டதாவது, “‘சிக்மா’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி ஜூலை 31 என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். படம் மிகவும் சிறப்பாக உருவாகியுள்ளது. ரசிகர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும் என்று நம்புகிறோம். இயக்குநராக அறிமுகமாகும் ஜேசன் சஞ்சய் மிகுந்த தெளிவுடனும் அர்ப்பணிப்புடனும் இந்த படத்தை அணுகியுள்ளார். படத்தில் பணிபுரிந்துள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் இந்த படத்தில் அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர். உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடம் ‘சிக்மா’ திரைப்படத்தை கொண்டு செல்ல ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்றார்.
இயக்குநர் ஜேசன் சஞ்சய் பகிர்ந்து கொண்டதாவது, “‘சிக்மா’ எனக்கு மிகவும் சிறப்பான மற்றும் மறக்க முடியாத பயணமாக இருந்தது. எனது கதையில் நம்பிக்கை வைத்து தொடர்ந்து ஆதரவு அளித்த லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுபாஸ்கரனுக்கு மனமார்ந்த நன்றி. அர்ப்பணிப்புடன் செயல்பட்ட நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருடன் பணியாற்றியது மிகுந்த மகிழ்ச்சி. ஜூலை 31ஆம் தேதி ‘சிக்மா’வை ரசிகர்களிடம் கொண்டு செல்ல ஆவலுடன் காத்திருக்கிறோம். விரைவில் படம் குறித்தான மேலும் பல சுவாரஸ்யமான அப்டேட்ஸ் பகிர இருக்கிறோம்”.
மேலும், படத்தின் ஆடியோ வெளியீடு மற்றும் டிரெய்லர் வெளியீட்டு அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.






